Comic fan

Monday, November 28, 2016

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 1கருப்பு பணம் ஒழியாதா.. விடிவு காலம் பிறக்காதா ? என்று அனைவரும் ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தை ப்ளாக்க்கில் டிக்கெட் வாங்கி பார்த்துவிட்டு கனா கண்டு கொண்டிருந்தனர். படத்தில் வரும் பல காட்சிகளுக்கு கை தட்டி மாய்ந்தனர். அந்நியன் படமும் இதில் சேர்த்தி.  பிச்சைக்காரன் திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஐடியா என்று வாய் பிளந்தனர். சூப்பர் எனும் கன்னட திரைப்படமும் கருப்பு பணம் ஒழிந்து இந்தியா பிரகாசிப்பதாக ஒரு பிரமையை உருவாக்கியது. இந்த மாதிரி ஏதும் நடந்து இந்த நாடு சுபிட்சம் அடையாதா என்று அங்கலாய்த்தனர்.  

அடித்தான் ஒரு நாளிரவு ஆப்பு..


அன்று வரை யாரவது ஒரு மாற்றத்தை கொண்டு வர மாட்டார்களா என்று திண்ணை கச்சேரி செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் பொருளாதார நிபுணர்களானார்கள். அரசியல் என்றால் காத தூரம் ஓடியவர்களெல்லாம் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தனர். சில பெரிசுகள், 1978'ல் என்ன ஆச்சு தெரியுமா ? 5000. 10000 நோட்டெல்லாம் திருப்பதி உண்டியல்லே போட்டுட்டாங்க என்று பழைய பஞ்சாங்கத்தை புரட்டினர்.

ஏழை மக்கள் உறங்கினர். கொழுத்தவர் வீட்டில் இரவெல்லாம் விளக்கெரிந்தது. நகைக்கடைகளில் கல்லா கட்டியது. ரோலேக்ஸ் கடிகாரங்கள் விற்று தள்ளின. Purgolax இல்லாமலே பல பேருக்கு நிற்கவில்லை.கௌண்ட மணியிடம் சுந்தர ராஜன் சொன்ன மாதிரி சிவப்பு கொடி காட்டி நிறுத்தி இருப்பார்களென்று என் கணிப்பு.

படித்தவர் கிளப்பிய புரளியில் வங்கி திறந்த நாளில் கூட்டம் அலை மோதியது. இருப்பவன் 
இல்லாதவன் அனைவரும் ஒரே வரிசையில். இல்லாள்களின் சுருக்கு பைகள் செல்லாத நோட்டுகளை கக்கின.  அஞ்சறைப்பெட்டியிலும்  அரிசி மூட்டையிலும் கருவுற்றிருந்த சேமிப்புகள் கருக்கலைப்பு செய்யப்பட்டன.

 வக்கிரம் பிடித்த மாந்தர் சிலர் வயிற்று பிழைப்புக்காக உடலை விற்றுப் பிழைக்கும் விலை மாதரிடம் தங்களது புத்திசாலித்தனத்தை காட்டினர். செல்லாத நோட்டுக்களை கொடுத்து காமப் பசியாறினர். விலை மாதரும் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் என்று வந்த காசை முடிந்தனர்.

பெட்ரோல் பங்கில் செல்லாது என்று சொல்லப்பட்ட 500 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு மீதி சில்லறை கேட்டு அளப்பறை செய்தவர்கள் அநேகம்.
சுடுகாட்டில் அன்று வெந்த அனைத்துப் பிணங்களும் 500, 1000 என்றே கொண்டு வந்திருந்தன.
என்ன ஆச்சரியம் .. "சில்லறை இல்லேன்னா வண்டியில் ஏறாதே" என்று கறார் பேசிய நடத்துனர் அனைவரும் கணக்கு காட்டிய போது எல்லா நோட்டுகளும் செல்லாதவையாகவே இருந்தன.

வரிசையில் நின்று செய்வதறியாது கண் கலங்கும் மூதாட்டியின் வீடியோ ஊடகத்தை சங்கடப்படுத்தியது. வீடியோ எடுத்த மெத்தப் படித்தவர் அந்த கிழவியின் அவலத்தை எப்படி பிரபலமாக்குவது என்று யோசித்த நேரத்தில் சில்லரை கொடுத்து உதவியிருக்கலாம்.  

0 Comments:

Post a Comment

<< Home