Comic fan

Wednesday, December 03, 2025

Tirupati 2

 ஜெயிலர் படத்தில் வர்மனுக்கு வந்தது போல ஒரு ஆசை. பெரிய ஆசையெல்லாம் கிடையாது. சின்ன ஆசைதான். ஒரு முறையாவது மலையப்பனை சற்று அருகாமையில் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை.  


திருப்பதிக்கு லட்டு கொடுத்த வைபவத்திற்கு பின் ஐயனை வருடம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தரிசிப்பது வழக்கமாயிற்று. கோவிட் கைங்கர்யத்தில் 5 வருடம் அதில் துண்டு விழுந்தது. இந்த வருடம்  மார்ச் மாதத்தில் கல்யாண உற்சவத்திற்கு டிக்கெட் எடுத்து தரிசனம் ஈடேறியது. அப்போதுதான் Srivani Break Darshan பற்றி கேள்விப்பட்டேன். ஆசை யாரை விட்டது. அதுவும் நெருக்கித் தள்ளும் கூட்டமில்லாமல் ஐயனை தரிசிக்கலாமென்று கேள்விப்பட்டத்திலிருந்து அந்த ஆசை. பணத்தை கட்டுவது டிக்கெட் போடுவது எல்லாம் நல்லபடியாக நடந்தது.

அந்த நாள் நெருங்கும்போதுதான் மழை. அடைமழை. திருப்பதிக்கு ஆரஞ்சு Alert கொடுத்திருந்தார்கள். இதற்கெல்லாம் பயந்தால் எப்படியென்று எண்ணி திருப்பதிக்கும் வந்தாச்சு. ஒரு நாள் கையில் இருந்ததால் குடிமல்லம் பரசுராமேசுவரரை தரிசிக்க முடிவு செய்தோம். ஸ்வர்ணமுகி ஆற்றில் 60 வருடத்திற்கு ஒரு முறை பெருக்கெடுத்து சிவனை அணைத்து செல்லும் என்று படித்த ஞாபகம். 2005ல் இந்த நிகழ்வு என்றும் படித்திருந்தேன். அருகே செல்லும்போது பொழுது சாய்ந்திருந்தது. இருட்டு சூழத் தொடங்கி இருந்த நேரத்தில் ஓடையின் தரைப்பாலத்தில் முழங்கால் அளவு நீரோட்டம். கோவிலுக்குள் நுழைந்தவுடன் மழை கொட்டியது. மெதுவாக அந்த ஓடையை தாண்டி திரும்ப வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் அம்மாவுக்கு முதல் attendance போடுவோமென்று போனால் மறுபடியும்  சரியான மழை. ஏறக்குறைய நீந்திக்கொண்டே தரிசனம் செய்தோம். பக்கத்திலுள்ள அண்ணன் கோவிந்தராஜனையும் தரிசித்தோம். கிருமி கண்ட சோழன் மஹாத்மீயம் பற்றி கோவில் பிரகாரத்திலும் இணையத்திலும் படித்து தெரிந்து கொண்டோம். சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜனை பிச்சாவரத்திற்கு அருகே கடலில் கரைத்ததை தசாவதாரத்தில் ஆண்டவர் கோடிட்டு காட்டி இருந்தார்.

போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் உடையவர் ஏகப்பட்ட வேலை செய்திருக்கிறார். கில்லாடிதான் ! பார்த்தசாரதி பெருமாள் கொடுத்த இடத்தில் அண்ணன் கோவிந்தராஜன் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். தம்பி மலையப்பன் கல்யாணத்திற்கு குபேரனிடம் பெற்ற கடன் சம்பந்தமாக கணக்கு வழக்கு அண்ணன்தான் கவனிப்பதாகவும் ஐதீகம். பெருமாள் என்றாலே "ஜெருகண்டி"தான் போலும். கூட்டமில்லாத கோவிலில் நிதானமாக சேவிக்கலாமென்று பார்த்தால் அதற்கு வழியில்லை. அடித்து துரத்தி விட்டார்கள். ஸ்ரீரங்கத்தில் பெருமாளை பூச்சாண்டி சேவையில் தரிசித்தது கூட சுலபமாக இருந்தது.

ஒரு வழியாக மலைக்கு வந்து சேர்ந்தால் கண்மண் தெரியாத மழை, நந்தகத்தில் ஜாகை என்று தெரிந்துகொண்டு அங்கே வந்தால் நச நசவென்று ஈரம். பெரிய ரூம், சம்பந்தமில்லாத பெரிய கட்டில் மற்றும் ஒரு சின்ன கட்டில். ரெண்டு சோஃபா, வழுக்கும் குளியலறை. ரெண்டு commode (Indian & Western). Geycer வேலை செய்தது. Lobbyல் க்ரானைட் போட்டு இழைத்திருந்தார்கள். Water Purifierல் இருந்து ஒழுகிய தண்ணீர் வழியில்லை. மட்டமான பிளம்பிங் போலும். எங்கு பார்த்தாலும் சுவர் உப்பியிருந்தது.  சிப்பந்திகள் சில்லறையில் மட்டுமே  குறியாக இருந்தார்கள். Sarangee வரை செல்ல திராணியில்லாததால் பக்கத்தில் இருந்த கையேந்தி பவனில் இரவு சாப்பாடு.

காலையில் 10.15க்கு வரவேண்டும் என்று டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். யாரோ சொன்னதை நம்பி பயோமெட்ரிக் counterக்கு சென்றோம். ஒரே மழையப்பன். இங்கெல்லாம் பருப்பு வேகாது, Supadham வெல்லண்டி என்று செப்பினார்கள். கொட்டும் மழையில் படியேறி அங்கே போனால் VQC 1 வெல்லச் செப்பினார்கள். அங்கே வெல்லினால் பக்கம் வரை காரில் வந்திருக்கலாம் என்று தெரிந்தது. பெருமாள் வச்சு செய்வது என்று தீர்மானித்த பிறகு ஒன்றும் செய்ய முடியாது. இடையில் பிரசவ வைராக்கியம் வேறு. இதற்கு மேல் இங்கு வருவதில்லை என்று. அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ நட ... என்று ஒரு mind voice கேட்டது. உள்ளே ஊரி(றி)க்கொண்டு போனால் மஹாதுவாரத்தில் நிறுத்தி எங்கே வந்தாய் என்று கேள்வி. Sreevani darshan என்று சொன்னால் Free Darshanஆ என்று கேட்டார்கள். அதற்குள் ஒருவர் உள்ளே அனுப்பச்சொல்லி கயிற்றை தூக்கிவிட்டார். வாழ்நாளில் Vendi Vaakilai தள்ளுமுள்ளு இல்லாமல் தாண்டியதே இல்லை. நெருக்கும் கூட்டத்தில் முழி பிதுங்கி கால்கள் இரண்டும் அந்தரத்தில் இருக்க அப்படியே நசுக்கி Bangaru Vaakilu வரை கொண்டு செல்வார்கள்.இந்த முறை நாங்களாக நடந்து சென்றோம். Queueவை விலக்கி வலது பக்கமாக போக சொன்னார்கள். அப்படியே சென்று எப்பொழுதும் ஜெருகண்டி சொல்லும் இடத்தில் மறுபடி ஐக்கியமானோம். இன்னும் இரண்டு வாசல்களை தாண்டி பெருமாள் முன்னே இரண்டு நொடி நிற்க முடிந்தது. 

எந்த கோரிக்கையும் நினைவுக்கு வரவில்லை. கண் சிமிட்ட மனமில்லை. வெளியே வந்ததற்கு அப்புறம் Calendaril பார்த்த பெருமாள் மட்டுமே நினைவில் வந்தது. உண்டியலை பார்த்தவுடன் லட்டு வாங்க கொடுத்த சீட்டை பெருமாள் பிடிங்கிய ஞாபகம் வந்தது ....

மீண்டும் அழை மலையப்பனே !
    
   


0 Comments:

Post a Comment

<< Home