Comic fan

Tuesday, December 23, 2025

பச்சிலைப் படலம் ...

தொழில் நுட்ப கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் (83 or 84). கிறிஸ்துமஸ் வர ஒரு வாரம் இருக்கும்போதே விழா எடுத்து விடுவார்கள். அதன் பிறகு 10 நாள் விடுமுறை வரும். விழாக்கொண்டாட்டத்தில் மாணவர் அனைவரும் சேர்ந்து ஆடல், பாடல் கொண்டாட்டம்தான். புகை பிடிப்பது என்ற நல்ல பழக்கத்தை ஆரம்பித்திருந்த காலம்.
மாதத் துவக்கத்தில் வில்ஸ் பில்டர்..மாதம் தேய தேய பீடி என்பது எழுதாத விதி. ஹாஸ்டெலில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. அறிவியலில் சுமாரான மார்க் வாங்கியிருந்த நண்பர்கள் கண்டுபுடித்தது என்னவென்றால் மொட்டை மாடியில் பிடித்தால் வார்டனின் மூக்குக்கு எட்டாது என்னும் அரிய விடயம் அவர் ஒரு துப்பறியும் சாம்பு. எப்படியோ கண்டுபிடித்து விட்டார். இருட்டில் மேலே வர தயங்கி செக்யூரிட்டியை கூட வைத்துக்கொண்டு மாடி ஏறினார். சத்தம் கேட்காமலிருக்க வேண்டுமென்று காலணி கழற்றி விட்டு வெறும் காலில் நடந்து வந்தார். பின்னாலிருந்த செக்யூரிட்டி லாடம் வைத்த ஷூ போட்டுக்கொண்டு பைய படியேறினார். இது போதாதா .. மக்கள் விட்டனர் சவாரி.
30 பேர் இருந்து batchல் 19 பேர் புகை பிடிப்பவர்கள். தலையணையின் கீழ் எப்போதும் சரக்கு இருக்கும். இரவு உணவிற்குப் பின் மொட்டை மாடிக்கு திருட்டுத்தனமா நழுவி ஒரு வெண் சுருட்டை மூன்று பேர் பகிர்ந்தது இன்னும் மறவாத களவு. இன்று சந்தித்தாலும் அப்படியே ..
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நண்பன் "இளைய நிலா.. பொழிகிறது" பாடினான். நண்பனுக்கு "ழ"னா வராது. சுருதியும் சேரவில்லை. முதல் வரி பாடிவிட்டு, மூத்த சகோதரியை கோபத்துடன் அழைத்தான். மைக்கில் எல்லாருக்கும் கேட்டது. சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று. அடுத்த குரூப் புதிய ராமாயணம் படைத்தார்கள்.
சந்தேகத்திற்குறிய முறையில் சில நண்பர்கள் நழுவினர் மொட்டை மாடியை நோக்கி.. மேலே சென்று பார்த்தால் தனியாக ஒரு கும்பல் எதையோ உள்ளங்கையில் வைத்து கசக்கி ஆராய்ந்து கொண்டிருந்தனர். பிறகு அந்த கலவையை வெண் சுருட்டுக்குள் அடைத்து பற்ற வைத்தனர். வித்யாசமான நெடி. என்னடா இது என்று கேட்டால், கன்னடத்தில் "சொப்பு" என்றான். என்ன இலையாக இருக்கும் என்று வியந்து கொண்டிருந்த போது, "பேக்கா" என்றான். வந்தது வந்தாச்சு, என்னதான் நடக்குதென்று பார்ப்பதற்காக கையில் வாங்கிக்கொண்டேன்.
புகையை நெஞ்சார இழுத்தேன். மூன்றாவது முறை நெஞ்சில் கழுதை உதைத்தது போலிருந்தது. கண்ணைக் கட்டியது. தலை சுற்ற ஆரம்பித்தது. மெதுவாக படியிறங்கி ரூமிற்கு போய் விடலாம் என்று எட்டிப் பார்த்தால் அதல பாதாளமாய் தெரிந்தது படிக்கட்டு. கைப்பிடியை இறுக்கமாக பிடித்து கொண்டு படியிறங்க ஆரம்பித்தேன். படிகள் நீண்டுகொண்டே போயின. பல மணி நேரம் போன மாதிரி இருந்தது. ரூம் வந்து சேர்ந்தது. செய்யக்கூடாத ஒன்றை செய்தேன். தலை சாய்த்தேன். ப்ரம்மஹத்திகள் முதலிலேயே சொல்லியிருக்கலாம் படுக்காதே என்று. Infinity radius கொண்ட ராட்சத ராட்டினம் சுற்றியது. குடல் வாய்க்கு வந்தது.
கண் திறந்து பார்த்தால் இரண்டு ப்ரம்மஹத்திகள் moon விளையாடிக்கொண்டிருந்தன. அது என்ன விளையாட்டு என்று பிறகு சொல்கிறேன். முகம் அலம்பினால் தெளியுமோ என்று எண்ணி தட்டு தடுமாறி wash basinல் உள்ள கண்ணாடியில் பார்த்தால் கண்ணைக் காணோம். எப்படியோ மறுபடியும் படுக்கைக்கு வந்து வண்டி மலையேறியது. அடுத்த நாள் விழிப்பு வந்த போது காட்பாடி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தேன் சித்தூர் செல்லும் பஸ் பிடிக்க. "நடுவுல ஒரு பக்கத்தை காணோம்"
விடுமுறை முடிந்து திரும்பி வந்து அந்த நண்பனிடம் விளக்கம் கேட்ட போது சிரித்தான். அது ஒரு amplifier. எந்த உணர்வையும் பல மடங்காக்கும். பயமும் இதில் சேர்த்தி. செய் முறை விளக்கத்துடன் அடுத்த trial அரங்கேறியது. லாகிரி வஸ்துவின் வீரியம் விளங்கியது.
பல வருடங்கள் கழித்து இந்த வீர தீர பிரதாபத்தை பற்றி பீற்றிக் கொண்டிருந்த போது ஒரு ஞானி மண்டையில் கொட்டி அது அப்படியல்ல என்று மாற்று செயல் முறை கூறினார். ஆட்டுப்பாலில் பச்சிலையை ஊற வைத்து, வெந்நீர் காய வைக்கும் அடுப்பின் புகை போக்கியில் மூங்கில் குழையில் அடைத்து வைக்க வேண்டும், சில நாட்கள் கழித்தெடுத்து, இளநீரில் மூன்று துளையிட்டு, நாணலில் பச்சிலையை பக்குவமாக அடைத்து, organic ஹூக்கா போல உபயோகிக்க வேண்டுமென்றார். வெண்ணையை உருக்கி புகையாக்கி உறிஞ்சுவது போலிருக்கும். மேகத்தை நெஞ்சில் சேர்ந்தாற் போல இருக்கும் என்று வேறு உசுப்பேத்தி விட்டார். செய்து பார்க்க நேரம் அமையவில்லை. அன்னாரிடம் அவர் பேர் சொல்வதில்லை என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்... அன்பர் யாரென்று நீங்கள் யூகித்தால் நான் பொறுப்பல்ல.— feeling naughty.

0 Comments:

Post a Comment

<< Home