Comic fan

Tuesday, December 23, 2025

Mama Veedu

 வார இறுதியில் மாமா வீட்டிற்கு செல்வது என்பது ஒரு பழக்கமாக இருந்தது. (முன்னர் குறிப்பிட்டிருந்த மாமாக்கள் aka அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர்கள்).கடைசி மாமாவுக்கும் எனக்கும் மூன்று வயது மட்டுமே வித்தியாசம். இடைப்பட்டவர் படிக்காத மேதை. அவருக்கு தெரியாதது என்றும் ஒன்றும் இல்லை. எல்லாவற்றை பற்றியும் ஏதாவது தெரிந்து வைத்திருப்பார். சரியான screw driver. எதை வேண்டுமானாலும் கழட்டி மாட்டுவார்.

ரிஷி மூலம் மற்றும் நதி மூலம் (பூர்வீகம்) தருமபுரி என்பதால் தமிழில் சம்பாஷிப்பது வீட்டில் நடைமுறை. பாட்டிக்கு கன்னடத்தில்தான் பேசவேண்டும். பாட்டி ஒரு சகலகலாவல்லி. பாட்டிக்கு தெரிந்த கை வேலைகள் ஏராளம், சாஸ்திர சம்பிரதாயங்கள் மற்றும் பாடல்கள் எல்லாம் தெரியும், நல்ல சாரீரம் (சரீரமும் கூட), பூஜை புனஸ்காரங்களில் தீவிர ஈடுபாடு. சமையலில் பிஸ்தா என்று சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் சரியாக இருக்க வேண்டும். நேரத்தில் நடக்க வேண்டும். சரியான வாய்ப்பு கிட்டியிருந்தால் அல்லது தேடியிருந்தால் வக்கீலாகியிருக்கலாம். அப்பேர்ப்பட்ட பேச்சுத் திறன் !
மாமாக்கள் முரண். கடைசி மாமா தூக்கப் பிரியர். அன்பே வா படத்தில் MGR ஊரெல்லாம் சுற்றி முடித்து விட்டு சோர்ந்து போய் வீடு திரும்புவார். கோப்பில் கையெழுத்திடச் சொன்னால் JB என்ற பேருக்கு J போட்டுவிட்டு தூங்கி விடுவார். இந்த மாமா அதுவும் செய்ய மாட்டார் .. தூங்கி விடுவார் !
வார இறுதியில் அழுக்கு மூட்டையுடன் மாமா வீட்டிற்கு சென்றால் uniform துவைத்து இஸ்திரி போட்டு தரப்படும். சனி இரவு சினிமா பார்க்கலாம். கதை பேசலாம். அல்லது கேரம் விளையாடலாம். வீட்டருகே ஒரு டூரிங் தியேட்டர். என்ன படம் போடலாம் என்று மாமாக்கள் பரிந்துரைப்பார்கள். சேர் டிக்கெட் வாங்கி படம் பார்த்து விட்டு அர்த்த ராத்திரிக்கு வீடு திரும்புவோம். எல்லாம் முடிந்து உறங்கப் போகுமுன் இரண்டு காரியங்கள் செய்வோம்.
ஒன்று மொட்டை மாடிக்கு போய் தம் அடிப்பது.. தாத்தாவுக்கு பயங்கர கடுப்பு. வெளியில் சொல்ல மாட்டார். மொட்டை மாடியில் இன்னும் கொஞ்சம் கதை பேசுவோம். இன்னொன்று.. வீட்டு முன் இருந்த காலியிடத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது. மாமா வீட்டின் முன்புறம் என்பது அடுத்தவர் வீட்டின் பின்புறம். அவர் வீச்சம் தாங்காமல் எங்களை ஒரு நாள் கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென தூங்காமல் காத்திருந்தார்.
நாங்கள் எத்தனிக்கும் நேரத்தில் தலை தூக்கி குரல் உயர்த்தி பேச ஆரம்பித்தார். மூத்த மாமா, "என்ன சார், நீங்களும் வந்து கம்பெனி கொடுப்பீர்கள் என்று பார்த்தால், அங்கேயே நின்று விட்டீர்களே" என்றவுடன் இவர்களை என்ன செய்வது என்று புரியாமல் உள்ளே சென்று கதைவடைத்தார்.அதன் பிறகு எங்களை கண்டு கொள்ள யாருமில்லை. இப்போதெல்லாம் அந்த மாதிரி காலியிடம் எங்கும் காணோம்.
மீண்டுமப்படி காற்று வெளியில் விசர்ஜனம் செய்வதெக்காலம் !— thinking about my childhood.

0 Comments:

Post a Comment

<< Home