Comic fan

Monday, November 28, 2016

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 5

"அத்தனைக்கும் ஆசைப்படு" என்றார் ஒரு உணர்ந்தவர். அவர் உணர்ந்தவரா இல்லையா என்ற தர்க்கம் பிறகு வைத்துக்கொள்ளலாம். 

ஆசை, பேராசை, வெறி, அதுக்கும் மேல .. 

ஆமாம்... ஒரு நேரத்திலே ஒரு தட்டுலேதான் சாப்பிட முடியும், ஒரு வட்டிலிலே தான் குடிக்க முடியும், ஒரு படுக்கையிலதான் படுக்க முடியும், ஒரு துணியைத்தான் உடுக்க முடியும்.. ஒரு துவாரத்தைத்தான் புணர முடியும். தொண்டைக்குழிக்கு கீழே போனதுக்கு அப்புறம் கம்பங்களியம், caviarம் ஒண்ணுதான்.. சுண்டக்கஞ்சியும், sakeயும் ஒண்ணுதான், வெளியேறும் போது வித்தியாசமே கிடையாது.. மல ஜலமாகத்தான் வெளியேறுகிறது..   எதற்கு இந்த மித மிஞ்சிய வெறி ..

"வரும்போதும் ஒண்ணும்  கொண்டு வரல .. போகும்போதும் ஒண்ணும்  கொண்டு போக முடியாது" என்கிற தலைவரின் சினிமா வசனத்திற்கு உச்சு கொட்டிய மக்கள் தனக்கு என்று வரும்போது சினிமா வேறு, நடைமுறை வேறு என்றார்கள். 

சேர்த்தவன் யாராவது நிம்மதியா இருக்கானான்னு பார்த்த .. இல்லே .. உடம்புலே ஈ மொய்க்குது. சேர்த்து வச்சதை வேலைக்காரன் சாப்பிடறான்..  மாற்றான் மனைவியை புணர்ந்தவனின் மனைவியை வேற்றான் புணர்கிறான். அடுத்த சந்ததி நெறியில்லாமல் வளர்கிறது. பிள்ளைகள் தெறி கெட்டு ஓடுகிறார்கள். மேலே போவது கீழே வரத்தான் செய்கிறது.

Charity begins at home என்றார்கள். இந்த சம்பவம் நடந்த மறுநாள் பேதலித்து வந்த பணிப்பெண்கள் இருவரையும் பயப்பட வேண்டியது நாம் அல்ல என்று விளக்கி, சில நாட்களுக்கு தேவையான சில்லறையை கொடுத்து அனுப்பினோம். வங்கிக்கோ தபால் ஆபீஸுக்கோ உடனடியாக சென்று மிதி படவேண்டாம் என்றும் சொன்னோம். சில்லரை எங்கிருந்து வந்தது ? சில வருடங்களுக்கு முன் பையனுக்கு பூணல் போட்ட போது நண்பரகளும், சொந்தங்களும் கொடுத்த சலவைத்தாள்கள் மனைவியின் கருப்பு பண முடிச்சிலிருந்தது. அடுத்த சில நாட்களுக்கு வீட்டுக்கு வந்த காய்கறிக்காரர்களும், இஸ்திரி அம்மாவுக்கும் சலவைத்தாள் சப்ளை ஈடேறியது.

கூட்டம் ஓய்ந்திருக்கும் என்று ஒரு சனிக்கிழமை வங்கிக்கு சென்றேன். கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. வன் புணரப்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்களில் புகை குறைந்திருந்தது. வங்கி ஊழியரின் முகத்தில் அயர்ச்சி தென்பட்டது. சந்தடி சாக்கில் சிக்கிய extra 2000 நோட்டை திருப்பி தராமல் போன புதிய கருப்பு பண முதலையை பற்றி அங்கலாய்த்த அம்மணியை வருத்தத்துடன் மட்டுமே பார்க்க முடிந்தது. செக்கை கொடுத்து பணம் வாங்கினேன். வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றார்கள் ..  அவ்வளவு செலவு ஏது? இருந்தால்தானே எடுப்பதற்கு ! உள்நாட்டு செலாவணிக்கே வழி இல்லாம திருடிக்கிட்டிருக்கோம், அயல் நாட்டு செலவாணிக்கு எங்கே போவது என்ற கௌண்டமணியின் வசனம் நினைவுக்கு வந்தது.

பக்கத்துக்கு வீட்டு பணிப்பெண் சீட்டு போட்டு சேமித்த பணம் மொத்தமாக வந்து மாட்டியிருந்தது, வங்கிக்கணக்கு சொந்த ஊரில்! ஆதார் அட்டை சொந்த ஊரில்.. பணம் செலுத்தும் இயந்திரம் வேலை செய்யாது என்ற அறிவிப்பு வேறு! பேந்த பேந்த முழித்தவளை, பதட்ட படவேண்டாம் என்று கூறி அமைதிப்படுத்தினோம்.  பையனையும் பெண்ணையும் வங்கிக்கு அனுப்பி டெபாசிட் செய்ய சொல்லி, தேவைப்பட்ட போது எடுத்து தருகிறோம் என்றபின் ஓய்ந்தது. அப்படியே யாராவது பணம் மாற்றித்தர வரிசையில் நிற்க கூப்பிட்டால் போய் வெய்யிலில் வேக வேண்டாம் என்ற அறிவுரை வேறு. வங்கிக்கு சென்ற என் மகள் ஒரு கூடை Perk சாக்லேட் வாங்கி அங்கிருந்த பணியாளருக்கு வினியோகம் செய்து நன்றி தெரிவித்தாள்.

எல்லாம் ஓய்ந்தது என்று சாயும் போதுதான் அடுத்த வாரம் மாதத்தின் முதல் வாரம் என்று நினைவுக்கு வந்தது. 

Back to square one for the salaried class.
    
கதை முடிக்கும் முன்பு நினைவுக்கு வருவது கௌண்டமணியின் ஒலிக்கீற்று. "என்கிட்டே இனிமேல காசு இல்லேடா ! என்ன விடுங்கடா !!"  

வயிற்றெரிச்சல் படலம் முற்றிற்று !

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 4

இது நாள் வரை எதிரும் புதிருமாய் இருந்த கட்சிகளெல்லாம் "பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க" ஒன்று கூடினர். மகிழ்ச்சி ! ஆளும்கட்சியினர் இஞ்சி தின்ற குரங்கு போலாயினர். ஆங்கிலத்தில் Catch 22 என்பர். Damned if you do and damned if  you dont. There are no virgins in a maternity ward.. you know.  அரசியல் அரிசியல் ஆனது.  

அரசியல்வாதிகள் கல்வி நிறுவனங்களை அமைத்த போதே அதன் பின்னணி தெரியாதா.. பணம் ஒன்றே குறி. காசு கொடுத்து பட்டம் வாங்கியதால் விளைந்த விபரீதத்திற்கு மௌலிவாக்கம் ஒன்றே போதும். 

சினிமா நடிகர்கள் விதி விலக்கல்ல. "சத்தியமேவ ஜயதே" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த பெருமகன் இப்போது எங்கே ? பாலிவுட்டின் முதல் குடும்பம் எங்கே ? மற்ற தென்னிந்திய நடிகர்கள் எங்கே ?      

பேசா மடந்தை என்று புகழ் பெற்ற முன்னாள் பிரதமர் பேசினார். அது சரி .. உழும் காலத்தில் உறங்கிவிட்டு அறுவடை காலத்தில் புலம்பியது போல ..எல்லாம் சரி .. அவர்கள் ஆண்ட போது பெரும்பாலான கிராமங்களில் வங்கிகளோ, ATM களோ இல்லை என்பது தெரியாதா ? இப்போதுதான் தெரிய வருவது போல தாக்கி தள்ளி விட்டார்கள்.  விதண்டாவாதி என்று பெயர் பெற்ற Arnab முதல் முறையாக தெளிவுடன் பேசிய போது ஆளுங்கட்சியின் கைப்பாவை என்றாகியது. மற்ற தொலைக்காட்சிகள் மட்டும் என்ன நடு நிலையா ? 

எதிர் கட்சியில் இரண்டு முன்னாள் நிதி அமைச்சர்கள், ஜனாதிபதியே ஒரு முன்னாள் நிதி அமைச்சர். ஆளுங்கட்சியில் ஒருவர் என்று.. இதை விட நல்ல வியூகம் வேறு எப்போது கிடைக்கும். ஆக்கமுள்ள விவாதம் நடைபெறும் என்று பார்த்தால் குழாயடி சண்டையாக்கி விட்டீர்களே. பேப்பரை எறிந்து, கூச்சலிட்டு .. அடுத்த தலைமுறைக்கு உங்கள் நடத்தை  முன் உதாரணமல்லவா..  

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்று நாடு தழுவிய பந்த் வருகிற 28ம் தேதியன்று என்று கூவல். கூலிப்படைக்கு கொடுக்க வேண்டிய குவார்ட்டரும், கோழி பிரியாணி பொட்டலமும் சும்மா வருமா பாஸ் ?  உடனடியாக பல்டி .. மூன்று நாட்களில் வாபஸ் .. இல்லையேல் பின் விளைவுகள் .. 3 நாள் ஆச்சு பாஸ் .. 

ஊரை அடித்து உலையில் போட்டது போல கிங் பிஷர் சீமானின் கடன் தள்ளுபடி. யார் பணம் ? யார் தள்ளுபடி செய்வது ? விவசாயக்கடன் வாங்கியவனை தற்கொலைக்கு தள்ளி விட்டு, தண்ணி வண்டி ஒட்டிய பெருமானுக்கு விடுதலை. ஜப்தி செய்த சொத்துகள் ஏலம் விடப்பட்டனவா என்றால் .. இல்லை .. கல்விக்கடன் கட்ட முடியாத தந்தைக்கு இழிவு .. 

All animals are equal .. Some animals are more equal ..
  

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 3

சுங்கச் சாவடியில் 500 ரூபாய் நோட்டை நீட்டி சில்லரை கேட்டவர்களுக்கு நாணயமான மூட்டை கிடைத்தது, நெரிசல் தாங்காமல் சுங்கம் தவிர்த்தது அரசு ..

23 ATM சென்று பணம் எடுக்க முயன்ற கஜினி முஹம்மதுவின் வீடியோ தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்டது. இதுவே அடுத்த இரண்டு நாட்களுக்கு ஊடகங்களில் replay செய்யப்பட்டது. அலுவலகம் செல்ல இருப்பதிலேயே அதிக தூரம் என்று சொல்லப்படும் வழியை கடந்த ஒரு வாரமாக நான் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன். வழியில் உள்ள வங்கிகளையும் ATMகளையும் கடந்து சென்றால் நிலவரம் என்ன என்று தெரியும் அல்லவா. முதல் ஒரு வாரம் ரேஷன் கடையில் சர்க்கரை போட்டது போல் இருந்தது. பிறகு மெதுவாக பிசு பிசுக்க ஆரம்பித்தது. ஐந்தில் இரண்டு ATMகள் 2000 ரூபாய் கக்கிக்கொண்டுதான் இருந்தது. வெளியில் அறிவிப்பும் இருந்தது. 100 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பரவலாக இருந்தது என்னவோ உண்மை.  

கருப்பு பணம் இருப்பவன் எவனும் வரிசையில் நிற்கவில்லையே என்ற கேள்வி வேறு.. அவ்வளவு பணத்தையெல்லாம் வச்சுக்கிட்டு வரிசையில் நிற்க முடியாது பாஸ். இதெல்லாம் போதாதென்று பப்பு 4000 ரூபாய் பெற்றுக்கொள்ள வாங்கி செல்வதாக ஒரு photo ops ஈடேற்றினார். அன்னாரின் சிக்கனத்தை மெச்சி "சிக்கன சிகாமணி" என்று பட்டம் வழங்குவோமா ?

பிரதமரின் தாயார் வரிசையில் நின்று நோட்டு மாற்றினார் என்று ஒரு பக்க propaganda. இன்னொரு பக்கம் அவ்வளவு வயதான அம்மையாரை வரிசையில் நிறுத்திய கொடூரன் என்ற விமர்சனம் இன்னொரு பக்கம். முன்னால் போனால் முட்டுவதும் பின்னால் போனால் உதைப்பதும் நாம் பார்த்து பழகியதுதானே ..     

2000 ரூபாய் நோட்டை தண்ணீரில் முக்கினால் கலர் போகுமா போகாதா என்ற ஆராய்ச்சிக் காணொளி வைரலாக பரவியது. இது என்ன வியாதி என்று தெரியவில்லை. பணம் கிடைக்கவில்லை என்று ஒரு பக்கம் ஒப்பாரி.. இன்னொரு பக்கம் தேவநகரி உபயோகப்படுத்தப்பட்டது தவறு என்று வழக்கு, வியாஜ்யம். தாய் மொழி மறந்து ஆங்கிலத்தில் புரண்டு கொண்டிருக்கும் கான்வென்ட் படிப்பாளிகள் திடீரென இரண்டு ஆயிரம் என்று 3 மொழிகளில் தவறாக பதிக்க பட்டிருக்கிறது என்று கூறி நக்கீரர்களானார்கள்.

Misprint என்று கூறப்படும் நோட்டுகள் ebay எனப்படும் விற்பனை தளத்தில் கொள்ளை விலை கொடுத்து வாங்கும் அதே மக்கள் பிழை உள்ள நோட்டுக்களை போட்டோ பிடித்து ஊடகங்களில் போட்டு தள்ளினர். நோட்டு அச்சடிக்கும் இடத்தில வேலை செய்பபவனும் மனிதன்தானே என்று விட்டு வைக்கவில்லை. இந்த மாபெரும் அறிவுப்பு வெளி வருவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னரே 2000 ரூபாயின் மின் பிம்பங்கள் வாட்சப்பில் பரவியது. வயிற்றுப்போக்குக்கு மாத்திரை கொடுப்பது போல நானோ GPS புரளி. 

இல்லை ..ஆனால் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தசாவதாரம் வசனம் வேறு.. 

அறிவிப்பு வெளி வந்த நாள் முதலாக இறந்தவர் அனைவரும் வரிசையில் நின்று இருந்ததாகவே கணக்கு எழுதப்பட்டது.  தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்து பேச சொன்னது போலவே பொது மக்கள் பேசினார். அடிக்கடி கேமெராவை பார்த்து, "என்ன, நான் சரியா பேசுறேனா ?" என்று சாடையில் கேட்பது வேடிக்கையாக இருந்தது. தமிழில் பார்டர் மார்க் வாங்கி பாஸ் செய்த மக்களெல்லாம் செந்தமிழ் பேசும்போதே தெரியாதா ? எழுதிக்கொடுத்து படிக்கிறாரகள் என்று..    

தராதரம் இன்றி பிரதமரை தொலைக்காட்சியில் வைதவர்கள் சிலர். சு. சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது முன் வரிசையில் அமர்ந்து பிறப்புறுப்பை காட்டிய கண்ணியமான மாந்தரவல்லவா நாம்..   

திருமணங்களுக்கு இரண்டரை இலட்சம் வரை வங்கிகளில் பணம் எடுக்கலாம் என்று சொன்னவுடன் போலி வரவேற்ப்பிதழ்கள் நீட்டப்பட்டன. 

எது எப்படியோ MEME எனப்படும் சிரிப்பு சித்திரங்கள் மக்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தின. "இடுக்கண் வருங்கால் நகுக" என்று படித்தவர்களல்லவா நாம்..யாரையும் விட்டு வைக்கவில்லை.   

IIT Kharagpur எனும் மாபெரும் கல்வி நிறுவனத்தின் மேலிருந்த மரியாதை தரை மட்டமாகியது. முதல்வன் திரைப்படத்தில் வந்தது போல அவதார புருஷன் கிடைத்தான் என்று நினைத்த தில்லிவாசிகள் மண் கவ்வினர். IRS என்ற அரசு எந்திரத்தின் மேலான பெரு மதிப்பும் மண்ணாகியது. இதற்கு படிக்காத அரசியல்வாதியே மேல் என்ற வெறுப்பு எஞ்சுகிறது. 

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 2

4000 மாற்றி தந்தால் 500 ரூபாய் கைக்காசு என்றவுடன் வரிந்து கட்டிக்கொண்டு வங்கிகளை நோக்கி படையெடுத்த புலிகேசிகள் ஏராளம். காலையில் ஓட்டுநர் உரிமம், மதியம் வாக்காளர் அடையாள அட்டை, சாயங்காலம் ஆதார் அட்டை என்று மாறி மாறி "உழைத்து" வங்கி பணியாளர்களின் உயிரை வாங்கினர். விரலுக்கு மை என்றவுடன் எப்படியோ அனைவரிடமும் புதிய நோட்டுக்களோ, சில்லறையோ இருந்தது.  

வரிசை நீண்ட இடங்களில் நல்ல உள்ளங்களும் இருந்தன.  தவித்த வாய்க்கு தண்ணீர், தேநீர் தருவதிலிருந்து, ATM செல்பவர்க்கு சவாரி இலவசம் என்று சொன்ன  ரிக்க்ஷாகாரர்கள், மற்றும் உங்களிடம் சில்லரை வரும் போது பணம் கொடுக்கலாம் என்று சொன்ன சில்லறைக் கடைகள்.. அநேகம். 

காய் கறி விற்பவர்களிடம் 500 தாளை நீட்டி சில்லறை எதிர் பார்த்தவர் சிலரே. மிகப்பலர் உண்டியை உடைத்து இருந்த சில்லரையை பீராய்ந்து, இன்னும் ஒரு வாரத்துக்கு போதும் என்று பதறாமல் இருந்தவர்களே. 

ஆயினும் பதற்றம் யாரையும் விட்டு வைக்கவில்லை.

பெரிசுகள் சில முந்தியத்துக்கொண்டு வங்கிகளை நோக்கி படையெடுத்தன. வங்கி ஊழியர்கள் அவர் வாழ் நாளில் காணாத கூட்டத்தை கண்டனர். இனிமேல் யாரும் தலைவர் படம் முதல் நாள் முதல் ஷோ போல என்று சொல்லவே முடியாது. தபால் நிலையம் என்று ஒன்று இருப்பதே இந்த ஈமெயில் சமுதாயத்துக்கு இப்போதுதான் தெரிய வந்தது.   
      
கணக்கு திறந்த நாள் முதலாக zero balance காட்டிய ஜன் தன் கணக்குகள் அனைத்திலும் சரியாக 49000 மட்டுமே செலுத்தபட்டிருந்தன. 

வானம் பார்த்த பூமி .. வெள்ளாமையே இல்லே என்று உதட்டை பிதுக்கிய விவசாயிகளின் வங்கி கணக்குகளில் எப்படியோ கடந்த இரண்டு வாரங்களில் நல்ல மகசூல். 

மறந்து போன பல சொந்தங்கள் இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அரசு பான் அட்டைக்கு விண்ணப்பம் போட சொன்னது  மழுங்கிய மண்டைகளில் திடீரென உரைத்தது. பான் அட்டையும் வங்கி கணக்கும் இருந்த குடும்பத்தினர் அனைவரும் ஓவர் நைட் லட்சாதிபதி ஆனார்கள் (சரியாக 2.5 லட்சம் மட்டுமே).

மொட்டை தொலை பேசி அழைப்புகள் ஏராளம். உங்களிடம் கருப்பு பணம் இருந்தால் 30% கமிஷனுக்கு மாற்றி தருகிறோம் என்று. ஐயா இல்லை என்று சொன்னால், நீங்கள் ஓகே என்று சொன்னால் உங்கள் அக்கௌன்ட்டில் கொஞ்சம் பணம் போட முடியுமா ? ஒரு சில மாதங்களில் திரும்ப எடுத்து விடலாம் .. என்பது போல ... 

மழை நீர் செல்வதற்காக  உருவாக்கப்பட்ட வடிகால்களில் 500 மற்றும் 1000 நோட்டுகள் மிதந்தன... சில பல இடங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டது என்று புரளி கிளப்பினார்கள். கள்ள நோட்டாக இருந்திருக்க வேண்டும். 

வங்கி ஊழியர்களில் சிலர் தங்கள் ஊழ்வினைப் பயனை நொந்து கொண்டு பணியாற்றினர். நாட்றம்பள்ளியில் வங்கி மேளாலரின் சமஸ்க்ரித பாண்டித்யம் வெளிப்பட்டது. வீட்டில்  காலை உணவு உப்புமாவா.. பொங்கலா என்று தெரியவில்லை ..கெட்ட வார்த்தை பேசுவது உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா ? நாங்களும் பேசுவோமில்லே என்று விளாசி தள்ளினார். வீட்டில் காலை உணவு உப்புமாவா.. பொங்கலா என்று தெரியவில்லை .. அதையும் வீடியோ பிடித்து ஊடகத்தில் போட்டனர். எதற்கு லைக் போடுவது என்று விவஸ்தை இல்லாமல் எல்லாத்துக்கும் போட்டு தள்ளினர். வங்கி சேவகர்களின் சீரிய பணியை மெச்சி பூக்கொத்து அளித்த காணொளியும் இதில் சேர்த்தி...

மனிதரில் இத்தனை நிறங்களா ?

பார்ட் 1கருப்பு பணம் ஒழியாதா.. விடிவு காலம் பிறக்காதா ? என்று அனைவரும் ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தை ப்ளாக்க்கில் டிக்கெட் வாங்கி பார்த்துவிட்டு கனா கண்டு கொண்டிருந்தனர். படத்தில் வரும் பல காட்சிகளுக்கு கை தட்டி மாய்ந்தனர். அந்நியன் படமும் இதில் சேர்த்தி.  பிச்சைக்காரன் திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஐடியா என்று வாய் பிளந்தனர். சூப்பர் எனும் கன்னட திரைப்படமும் கருப்பு பணம் ஒழிந்து இந்தியா பிரகாசிப்பதாக ஒரு பிரமையை உருவாக்கியது. இந்த மாதிரி ஏதும் நடந்து இந்த நாடு சுபிட்சம் அடையாதா என்று அங்கலாய்த்தனர்.  

அடித்தான் ஒரு நாளிரவு ஆப்பு..


அன்று வரை யாரவது ஒரு மாற்றத்தை கொண்டு வர மாட்டார்களா என்று திண்ணை கச்சேரி செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் பொருளாதார நிபுணர்களானார்கள். அரசியல் என்றால் காத தூரம் ஓடியவர்களெல்லாம் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தனர். சில பெரிசுகள், 1978'ல் என்ன ஆச்சு தெரியுமா ? 5000. 10000 நோட்டெல்லாம் திருப்பதி உண்டியல்லே போட்டுட்டாங்க என்று பழைய பஞ்சாங்கத்தை புரட்டினர்.

ஏழை மக்கள் உறங்கினர். கொழுத்தவர் வீட்டில் இரவெல்லாம் விளக்கெரிந்தது. நகைக்கடைகளில் கல்லா கட்டியது. ரோலேக்ஸ் கடிகாரங்கள் விற்று தள்ளின. Purgolax இல்லாமலே பல பேருக்கு நிற்கவில்லை.கௌண்ட மணியிடம் சுந்தர ராஜன் சொன்ன மாதிரி சிவப்பு கொடி காட்டி நிறுத்தி இருப்பார்களென்று என் கணிப்பு.

படித்தவர் கிளப்பிய புரளியில் வங்கி திறந்த நாளில் கூட்டம் அலை மோதியது. இருப்பவன் 
இல்லாதவன் அனைவரும் ஒரே வரிசையில். இல்லாள்களின் சுருக்கு பைகள் செல்லாத நோட்டுகளை கக்கின.  அஞ்சறைப்பெட்டியிலும்  அரிசி மூட்டையிலும் கருவுற்றிருந்த சேமிப்புகள் கருக்கலைப்பு செய்யப்பட்டன.

 வக்கிரம் பிடித்த மாந்தர் சிலர் வயிற்று பிழைப்புக்காக உடலை விற்றுப் பிழைக்கும் விலை மாதரிடம் தங்களது புத்திசாலித்தனத்தை காட்டினர். செல்லாத நோட்டுக்களை கொடுத்து காமப் பசியாறினர். விலை மாதரும் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் என்று வந்த காசை முடிந்தனர்.

பெட்ரோல் பங்கில் செல்லாது என்று சொல்லப்பட்ட 500 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு மீதி சில்லறை கேட்டு அளப்பறை செய்தவர்கள் அநேகம்.
சுடுகாட்டில் அன்று வெந்த அனைத்துப் பிணங்களும் 500, 1000 என்றே கொண்டு வந்திருந்தன.
என்ன ஆச்சரியம் .. "சில்லறை இல்லேன்னா வண்டியில் ஏறாதே" என்று கறார் பேசிய நடத்துனர் அனைவரும் கணக்கு காட்டிய போது எல்லா நோட்டுகளும் செல்லாதவையாகவே இருந்தன.

வரிசையில் நின்று செய்வதறியாது கண் கலங்கும் மூதாட்டியின் வீடியோ ஊடகத்தை சங்கடப்படுத்தியது. வீடியோ எடுத்த மெத்தப் படித்தவர் அந்த கிழவியின் அவலத்தை எப்படி பிரபலமாக்குவது என்று யோசித்த நேரத்தில் சில்லரை கொடுத்து உதவியிருக்கலாம்.